போலீசாரின் தடையையும் மீறி இலங்கையில் எதிர்கட்சிகள் மாபெரும் போராட்டம்
By: Nagaraj Mon, 27 Feb 2023 7:04:55 PM
கொழும்பு: தேர்தல் ஒத்திவைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை தலைநகர் கொழும்பில், எதிர்க்கட்சிகள் சார்பில், மாபெரும் போராட்டம் போலீசாரின் தடையையும் மீறி நடத்தப்பட்டது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் கடந்த ஜூலை மாதம் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டனர். போராட்டம் தொடர்ந்ததால், உணவு, எரிபொருள், சமையல் உபகரணங்கள், மருந்துப் பொருட்கள் போன்றவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இந்தநிலையில், புதிய ஜனாதிபதியாக ரணில்விக்ரமசிங்க பதவியேற்ற பின்னர், கடனில் இருந்து மீள சர்வதேச நிதியைப் பெறுவதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார் எனினும், தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அந்நாட்டு தேர்தல் ஆணைக்குழு தேர்தலை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.
அடுத்த மாத தொடக்கத்தில் உள்ளூராட்சி தேர்தல் நடைபெற இருந்தது. இந்நிலையில், தேர்தல் ஒத்திவைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று, இலங்கை தலைநகர் கொழும்பில், எதிர்க்கட்சிகள் சார்பில், மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது.
எதிர்க்கட்சியான தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஜனாதிபதி அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர். போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்தனர்.
எனினும் போலீசாரின் தடையை மீறி பேரணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை வீசியும் எதிர்க்கட்சியினரை விரட்டியடித்தனர்.15க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.