மாதம் ரூ.1000 கிடைக்கவுள்ள ரேசன் அட்டைகளின் விவரம்
By: vaithegi Thu, 02 Mar 2023 3:34:24 PM
சென்னை: மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உரிமை தொகை வழங்கும் திட்டம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் ஈரோடு தேர்தல் பரப்புரையில் தெரிவித்திருந்தார்.
எனவே அதன்படி, ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன்3-ம் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை என்றாலும் இது அனைத்து பெண்களுக்கும் கிடைக்குமா? இந்த உரிமைத்தொகையை வாங்க யாரெல்லாம் தகுதியானவர்கள் என்ற பல கேள்விகள் மக்களிடையே இருந்தது.
இதையடுத்து அதன்படி, PHH என்ற வறுமைக் கோட்டுக்குக்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், 35 கிலோஅரிசி வாங்கும் PHAAY குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த ரூ.1000 உரிமைத் தொகை கிடைக்கும். அதேநேரத்தில் வயது வரம்பு, கணவரின் ஆண்டு வருமானமும் கணக்கிடப்பட்டு இந்த பயனர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும், அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்காது என கூறப்படுகிறது. மேலும், புதுமைப்பெண் திட்டத்தில் பயனடையும் கல்லூரி பெண்களின் தாயார்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும் என கூறப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ரேசன் அட்டையில் மாற்றம் ஏதும் செய்ய தேவையில்லை எனவும், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டவுடன் அவரவர்களின் வங்கிக்கணக்குக்கு நேரடியாக பணம் செலுத்தப்படும் எனவும்கூறப்படுகிறது. அதேபோன்று, 60 வயதுக்கு மேற்பட்டோர் வாங்கும் முதியோர் உதவித்தொகையிலும் இத்திட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் கூறப்படுகிறது.