பக்தர்கள் கையில் முத்தம் கொடுத்த சாமியார் கொரோனாவுக்கு உயிரிழப்பு
By: Karunakaran Sat, 13 June 2020 11:08:57 AM
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ராட்லா என்ற மாவட்டத்தில் பல ஆண்டுகளாக அஸ்லம் பாபா என்ற சாமியார் ஆசிரமம் நடத்தி வந்தார். அருள்வாக்கு கூறி பக்தர்களை நம்பவைத்து வந்த அவர், சமூக விலகலை கடைபிடிக்காமல் பக்தர்களுக்கு கையில் முத்தம் கொடுத்து கொரோனாவை விரட்டுவதாக கூறி வந்தார். கொரோனா அச்சத்தில் இருந்த பலர் அஸ்லம் பாபாவை தேடி வந்து முத்தம் பெற்றுச் சென்றனர்.
அப்படி வந்த பக்தர்களில் யாரோ ஒருவர் அஸ்லம் பாபாவுக்கு கொரோனாவை கொடுத்துச் சென்றதாக கூறப்படுகின்றது. இதனால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார், அதன்பின் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
தற்போது, அஸ்லம் பாபாவிடம் முத்தம் பெற்றுச் சென்ற நபர்கள் குறித்து மத்திய பிரதேசம் மாநில சுகாதார துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் 19 பேர் கண்டறியப்பட்ட நிலையில், பாபா காரணமாக 24 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் தனிமைப்படுத்தும் முகாமில் தனிமைப்படுத்தி உள்ளனர்.
ராட்லா மாவட்டத்தில் மட்டும் 80-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாநில சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது அவரிடம் முத்தம் வாங்கிச் சென்ற நபர்கள் கொரோனா கலக்கத்தில் உள்ளனர். கொரோனாவுக்கு விடப்பட்ட சவாலில் அஸ்லாம் பாபாவிடம் கொரோனா தனது வீரியத்தை காண்பித்துவிட்டது.