ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லையாம்... வெளிநாடு பறக்கும் ராகுல் காந்தி
By: Nagaraj Tue, 12 July 2022 7:41:08 PM
புதுடில்லி: வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்... காங்., தலைவரை தேர்வு செய்யவதற்கான கூட்டம் சோனியா தலைமையில் நடக்க உள்ள நிலையில் காங்., எம்.பி. ராகுல் வெளிநாடு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி தேர்தல், வரும் 18-ல் நடக்கிறது. அதைத்தொடர்ந்து, பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரும் துவங்குகிறது. இந்த சூழ்நிலையில் காங். கட்சிக்கு அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான முக்கியமான ஆலோசனை கூட்டம் வரும் வியாழக்கிழமை நடக்கிறது. இதில் சோனியா கலந்து கொள்கிறார். ஒவ்வொரு ஆலோசனை கூட்டத்திலும் ராகுல் கலந்து கொள்வார்.
இம்முறை அவர் பங்கேற்கமாட்டார் எனவும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், வரும் 17-ம் தேதி நாடு திரும்புவார் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, 2019 லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல். தற்போது இடைக்கால தலைவராக சோனியா இருந்து வரும் நிலையில் அவரது உடல்நிலை காரணமாக விலக உள்ளார். இதையடுத்து கட்சிக்கு நிரந்தர தலைமை இல்லாமல் தள்ளாடி வரும் நிலையில் வரும் 14-ம் தேதி நடக்க உள்ள ஆலோசனை கூட்டத்தில் ராகுல் பங்கேற்காமல் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.