உளவுத்துறையின் தோல்வியால் லடாக் மோதல் சம்பவம் ஏற்பட்டதா? - சோனியா காந்தி கேள்வி
By: Karunakaran Sat, 20 June 2020 10:04:22 AM
லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15-ஆம் தேதி சீன ராணுவத்தினருக்கும், இந்திய ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர். சீன தரப்பில் 39 பேர் மரணம் மற்றும் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த மோதலினால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க உயர்மட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சீன ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று பிரதமர் மோடி லடாக் மோதல் குறித்து விவாதிப்பதற்காக, காணொலி காட்சி மூலம் அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தினார். இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கலந்து கொண்டு, சரமாரியாக கேள்விகள் எழுப்பினர்.
அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, லடாக்கில் இந்திய பகுதியில் சீன ராணுவம் எப்போது ஊடுருவியது? அங்கு வழக்கத்துக்கு மாறான நிகழ்வுகள் நடப்பதாக வெளிநாடுகளில் உளவு பார்க்கும் இந்திய உளவு அமைப்புகள் தகவல் சொல்லவில்லையா? உளவுத்துறை தோல்வியால் இச்சம்பவம் ஏற்பட்டதா? அடுத்து என்ன செய்ய உத்தேசம்? என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர், எல்லைக்கோடு பகுதியில் ஏற்கனவே இருந்த நிலை நிலைநாட்டப்படும் எனவும், சீன ராணுவம் தனது பழைய இடத்துக்கு திரும்பிச் செல்லும் எனவும் பிரதமரிடம் நாட்டு மக்கள் உத்தரவாதத்தை எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, மத்திய அரசுக்கு உறுதியான ஆதரவைமேற்கு வங்காள அரசு அளிக்கும் என்று கூறினார்.