வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் உடல் நிலை குறித்து மாறுபட்ட தகவல்கள்
By: Karunakaran Tue, 25 Aug 2020 3:18:25 PM
கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா சர்ச்சைகளுக்கு பெயர்போன நாடாகும். இந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் குறித்து சர்வதேச ஊடகங்களில் எதிர்மறையான செய்திகள் பல வருகின்றன. அவை, எந்த பிரச்சனையாக இருந்தாலும் ஒரு சர்வாதிகாரியை போல் தடாலடியான முடிவுகளை எடுக்கும் கிம் ஜாங் அன் குறித்த செய்திகளை ஆகும்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கிம் ஜாங் அன்னின் உடல்நிலை குறித்த செய்திகள்தான் வலம் வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி நடைபெற்ற, ‘வடகொரியாவின் தந்தை’ என போற்றப்படும் தனது தாத்தா கிம் இல் சங்கின் பிறந்ததினக் கொண்டாட்டத்தில் கிம் கலந்துகொள்ளவில்லை. இருப்பினும், ஏப்ரல் மாத இறுதியில் கிம் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக அந்த நாட்டு அரசு ஊடகம் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டது.
கிம் தன்னுடைய பொறுப்புகளில் சிலவற்றை தனது தங்கை கிம் யோ ஜாங்கிடம் வழங்க முடிவு செய்துள்ளதாகவும் இதற்காக புதிய கொள்கைகள் வகுக்கப்பட்டு வருவதாகும் அண்மையில் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தென்கொரிய முன்னாள் அதிபர் கிம் டே ஜங்கின் உதவியாளர் சாங் சங் மின் “வடகொரிய தலைவர் கோமாவில் இருக்கிறார்” என்று கூறியிருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அவர், தற்போதைய நிலவரப்படி, வடகொரியாவின் அனைத்து அரசுப் பொறுப்புகளும் அவரின் சகோதரியான கிம் யோ ஜாங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
வட கொரியா சென்று வந்த சர்வதேச பத்திரிகையாளர் ராய் காலே, கிம் இறந்துவிட்டார் என்று தான் நம்புவதாக கூறினார். கிம் உடல்நிலை குறித்து வடகொரிய அரசால் பொதுமக்களுக்கு வெளியிடப்பட்ட தகவல்கள் அங்கு ஏதோ பெரிய விஷயம் நடப்பதை உணர்த்துவதாக ராய் காலே தெரிவித்தார். வடகொரியா விவகாரங்களை உன்னிப்பாக கவனித்து வரும் நிபுணர்கள் பலர் கிம் இறந்து விட்டதாகவே கூறுகின்றனர்.