கர்நாடக மாநில அரசின் உள்துறை செயலாளராக டி.ஐ.ஜி., ரூபா நியமனம்
By: Nagaraj Wed, 05 Aug 2020 8:51:07 PM
கர்நாடக மாநில அரசின் உள்துறை செயலாளராக ரூபா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவியில் அமர்த்தப்பட்ட முதல் பெண் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2017 -ல் சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இரு ஆண்டுகளுக்கு முன், சிறையில் சசிகலா முக்கிய பிரமுகர்களுக்காக சலுகைகளை பெற்று வருவதாக புகார் எழுந்தது.
அப்போது, கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜியாக இருந்த ரூபா, சசிகலாவுக்கு விதிகளை மீறி சிறப்பு அனுமதி வழங்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தார். சசிகலா விரும்பிய நேரத்தில் வெளியே சென்று வருவதற்கும், விரும்பிய உணவுகளை சமைத்து சாப்பிடுவதற்கு தனி சமையல் அறை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ரூபா குற்றம் சாட்டினார்.
இதற்காக அப்போதைய கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி சத்யநாராயண ராவ் உள்ளிட்ட
உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் ரூபா புகார்
கூறினார். அந்த சமயத்தில் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட தமிழகத்திலும்
டி.ஐ.ஜி ரூபா பிரபலமானார்.
பிறகு, சிறைத்துறையில் இருந்து
மாற்றப்பட்டு ரயில்வே துறையின் டி.ஐ.ஜி.,யாக பெங்களூருவில் பணியாற்றி
வந்தார். இந்நிலையில் , கர்நாடக மாநில அரசின் உள்துறை செயலாளராக ரூபா
நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ரூபா வெளியிட்டுள்ள ட்விட்டர்
பதிவில், இந்த பதவியில் அமர்த்தப்பட்ட முதல் பெண் நான் என்று
தெரிவித்துள்ளார். டி.ஐ.ஜி ரூபா 2000- ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரி
ஆவார்.