அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை புனிதமற்ற நேரத்தில் நடந்துள்ளதாக திக்விஜய் சிங் கவலை
By: Karunakaran Thu, 06 Aug 2020 12:32:29 PM
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. அதன்பின் ராமர் கோவில் கட்ட ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை மத்திய அரசு அமைத்தது. அயோத்தி ராமஜென்ம பூமியில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்ட அறக்கட்டளை சார்பில் கோவில் கட்டுமான பணிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன.
நேற்று ராமர் கோவிலுக்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடத்தப்பட்டது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, 40 கிலோ எடை கொண்ட வெள்ளியிலான செங்கலை அடிக்கல் நாட்டினார். மேலும், கோவில் கட்டுவதற்கான கல்வெட்டை திறந்து வைத்தார்.
இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக நேற்று நடந்த பூமி பூஜை புனிதமற்ற நேரத்தில் நடந்துள்ளதாக கூறி காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது ட்விட்டர் பக்கத்தில், பூமி பூஜை நடந்துள்ள நேரமானது, ஜோதிடம் மற்றும் வேதங்களின் நிறுவப்பட்ட நம்பிக்கைகளுக்கு முரணானது. கடவுளே, எங்களை மன்னியும். ராமர் கோவில் கட்டுமானம் சுமுகமாக நடந்தேற நான் பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.