முடி திருத்தும் நிலையங்கள் இயங்க நாளை முதல் உத்தரவு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
By: Monisha Mon, 18 May 2020 8:16:38 PM
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நோய்த்தொற்றின் தடுப்பு பணிகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. தற்போது இந்த ஊரடங்கு மே மாதம் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று குறையக் குறைய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முடி திருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையை பரிசீலித்து, பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தவிர ஏனைய ஊரக பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் 19-5-2020 அன்று முதல் இயங்குவதற்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த முடி திருத்தும் நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வரும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
மேலும், கையுறை அணிந்து முடிதிருத்துமாறும், முக கவசங்களை அணிவதை உறுதி செய்யுமாறும், கடையின் உரிமையாளர் முடிதிருத்தும் நிலையங்களில் ஒரு நாளைக்கு ஐந்து முறை கிருமி நாசினியை தெளிக்குமாறும், அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதற்கான விரிவான வழிமுறைகளை அரசு தனியாக வழங்கும் என கூறி உள்ளார்.