சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை அமைப்பு
By: Nagaraj Tue, 01 Nov 2022 6:30:05 PM
சென்னை : வடகிழக்கு பருவமழை தொடங்குவதையொட்டி, பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், காவல் துறை, தீயணைப்பு துறை, நீர்வளத்துறை ஆகிய துறைகள் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் கட்டுப்பாட்டு அறையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மழைக்காலங்களில் பொதுமக்கள் புகார் தெரிவிக்க 10 இணைப்புகளுடன் கூடிய ஹெல்ப்லைன் எண் 1913, தொலைபேசி எண்கள் 044-2561 9206, 25619207, 25619208 மற்றும் வாட்ஸ்அப் பயன்பாடு 9445477205 ஆகியவை இந்தக் கட்டுப்பாட்டு அறையில் செயல்படுகின்றன.
சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகள், நீர்நிலைகள், ஏரிகள் மற்றும்
முகத்துவாரங்களில் பொருத்தப்பட்டுள்ள 68 கண்காணிப்பு கேமராக்களின்
காட்சிகளை இந்தக் கட்டுப்பாட்டு அறையில் உள்ள திரை மூலம் கண்காணிக்க
முடியும். இந்த கட்டுப்பாட்டு அறையை நேற்று மேயர் பிரியா பார்வையிட்டு
ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள
நிலையில் தற்போது 10 இணைப்புகளுடன் இயங்கி வரும் உதவி எண் 1913ல் 10
கூடுதல் இணைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து
விசாரித்து புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை
கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்
பேடி, துணை ஆணையர்கள் எம்.எஸ்.பிரசாந்த், விசு மகாஜன் உள்ளிட்ட நிர்வாகிகள்
உடனிருந்தனர்.