2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புதிய கற்கால கல்திட்டை கண்டுபிடிப்பு
By: Nagaraj Wed, 15 June 2022 2:45:48 PM
கிருஷ்ணகிரி: கல் திட்டை கண்டுபிடிப்பு... கிருஷ்ணகிரி அடுத்த மயிலாடும்பாறையில், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட, புதிய கற்கால கல்திட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின், சொன்னதை உறுதி செய்யும் வகையில், கிருஷ்ணகிரி அடுத்த மயிலாடும்பாறையில் புதிய கற்கால கல்திட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவை பொருத்தமட்டில் இறந்தவர்களின் நினைவாக எழுப்பப்படும் பெருங்கற்படைகள், இரும்பு காலத்தை சேர்ந்தவை எனக்கருதப்பட்டு வரும் நிலையில், தற்போது அகழாய்வு நடந்துவரும், கிருஷ்ணகிரி மாவட்டம், ஐகுந்தம் பகுதியில், இக்கலாச்சார கூறுகளான கருப்பு, சிவப்பு பானை வகை மற்றும் பெருங்கற்படைகள், புதிய கற்காலத்திலேயே தொடங்கி விட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ்
கூறியதாவது: ஐகுந்தம் பகுதியில், மேற்கொண்ட கள ஆய்வின் போது, ஐகுந்தம்
தேன்மலையின் வடமேற்கு பகுதியில் ஒரு குகையில் புதிய கற்கால செங்காவி ஓவியம்
கண்டறியப்பட்டது. இது பெருக்கல் குறி போன்ற உடலமைப்பை கொண்ட மனித உருவம்.
அண்மையில் மயிலாடும் பாறையில் நடத்தப்பட்ட அகழாய்வில், இரும்பின் பயன்பாடு 4
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டதற்கான சான்று கிடைத்துள்ளது.
அதேபோல்,
கருப்பு சிவப்பு பானை ஓடுகளும், புதிய கற்கால கலாச்சாரத்தின் இறுதிக்
கட்டத்திலேயே தொடங்கிவிட்டதாக சான்றுகள் தெரிவிக்கின்றன. பாறை ஓவியம்
காணப்படும் பாறைக்கருகிலேயே, ஒரு கல்திட்டை கண்டறியப்பட்டுள்ளது.
இக்கல்திட்டை வழக்கமான கல்திட்டை போல் இல்லாமல், மிகவும் முற்பட்டதாய்
உள்ளது. இதனை ''தூக்கி வைத்தான் கல்'' என்றும் குறிப்பிடுவர். செஞ்சாந்து
ஓவியம் மற்றும் இந்த கல்திட்டையும், பெருங்கற்படை காலத்தின் தொடக்கம், கிமு
1000 என்பதிலிருந்து, கிமு 2000 என்பதை உறுதிப்படுத்துகின்றன.
அதாவது புதிய கற்காலத்திலேயே கருப்பு, சிவப்பு பானை வகையும் பெருங்கற்படைகளும் தோன்ற தொடங்கி விட்டன எனலாம். இவ்வாறு அவர் கூறினார்.