ரூ.100 கோடி செலவில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
By: Karunakaran Mon, 08 June 2020 10:16:23 AM
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பல்வேறு மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிராவில் சிக்கிய லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மஹாராஷ்டிர மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறுகையில், இதுவரை ரூ.100 கோடி செலவில் 11 லட்சத்துக்கும் அதிகமான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், மத்திய அரசின் உதவிக்கு காத்திருக்காமல் தொழிலாளர்களை மகாராஷ்டிரா அரசு சொந்த செலவில் ஊருக்கு அனுப்பியதாக தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தங்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால், மாநில அரசின் மகாத்மா ஜோதிபா புலே ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சை பெற முடியும் என்று தெரிவித்துள்ளார்.
55 வயதுக்கு மேற்பட்ட போலீசாரை பணிக்குவர வேண்டாம் என கூறியுள்ளதாகவும், அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வருவதாகவும் அனில் தேஷ்முக் கூறினார்.