மெரினாவில் கடைகள் வைக்க விண்ணப்ப படிவங்கள் வினியோகம்
By: Monisha Sat, 19 Dec 2020 1:51:04 PM
கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக மெரினா கடற்கரை மார்ச் மாதம் மூடப்பட்டது. பொதுமக்கள் மெரினாவிற்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் அங்கு நிரந்தர கடைகள், தள்ளுவண்டி கடைகளில் வியாபாரம் செய்தவர்களும் வெளியேற்றப்பட்டனர். தற்போது தொற்று பரவல் குறைந்து வருவதால் சுற்றுலா இடங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
அந்த வகையில் சென்னை மெரினா கடற்கரைக்கு கடந்த வாரம் முதல் பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள மக்கள் மெரினாவிற்கு வந்து செல்கிறார்கள். பொதுமக்கள் வந்தாலும் மெரினாவில் கடைகள் வைக்க மாநகராட்சி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அங்கு வியாபாரம் செய்வதற்கு மாநகராட்சியிடம் அனுமதி பெறப்பட வேண்டும். கடைகள் வைப்பதற்கு மாநகராட்சியிடம் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். ஏற்கனவே கடை வைத்திருந்தவர்கள் மற்றும் புதிதாக கடை வைக்க விருப்பம் உள்ளவர்கள் என இரண்டு வகையாக பிரிக்கப்பட்டு விண்ணப்பம் வினியோகிக்கப்படுகிறது.
கடந்த வாரம் முதல் மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் விண்ணப்பம் வாங்க வியாபாரிகள் குவிந்தனர். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படிவங்கள் வினியோகிக்கப்பட்டன. கடந்த இரண்டு நாட்களாக கூட்டம் மேலும் அதிகரித்தது. நீண்ட வரிசையில் நின்று வாங்கி செல்கின்றனர். கடந்த 14-ம் தேதி விண்ணப்ப வினியோகம் தொடங்கியது. இதுவரையில் 5400 படிவங்கள் வினியோகிக்கப்பட்டன.