தீபாவளி பேருந்து டிக்கெட் முன்பதிவு நாளையுடன் நிறைவு
By: vaithegi Tue, 10 Oct 2023 12:41:25 PM
சென்னை: நாடு முழுவதும் சிறப்பிக்கப்படும் முக்கிய பண்டிகைகளில் தீபாவளி முன்னிலை வகித்து வருகிறது. பொதுவாக தீபாவளி பண்டிகைக்காக தொடர் விடுமுறைகள் விடப்படுவதால் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்க தொடங்குவார்கள். எனவே இதற்காக பண்டிகை தினத்திற்கு 2 , 3 நாட்களுக்கு முன்னதாகவே சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. நடப்பாண்டு நவம்பர் 12ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.
எனவே இதற்காக தமிழக அரசு சென்னை, திருச்சி, திருநெல்வேலி, கோவை, மதுரை, பெங்களூரு, திருப்பதி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கான சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளது. வருகிற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை தினத்தில் வருவதால் மக்கள் நவம்பர் 7, 8ம் தேதி முதல் பயணிக்க தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தமிழக விரைவு போக்குவரத்து கழகத்தில் 30 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இதையடுத்து அதன்படி நவம்பர் 7ஆம் தேதிக்கான பேருந்துகளுக்கு நேற்று முன்பதிவு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அதிக அளவிலானவர்கள் முன்பதிவு செய்யதுள்ளனர்.
மேலும் நவம்பர் 8ம் தேதிக்கு அக்டோபர் 10ம் தேதி , நவம்பர் 9 ம் தேதிக்கு அக்டோபர் 11ம் தேதியாகிய நாளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தீபாவளி பயணத்தை மேற்கொள்ள உள்ளவர்கள் விரைந்து தங்களின் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.