ஈரோடு தொகுதியில் பணப்பட்டுவாடா... தடுக்க தேமுதிக தலைவர் வலியுறுத்தல்
By: Nagaraj Thu, 23 Feb 2023 11:09:12 PM
சென்னை: பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டும்... ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, இடைத்தேர்தலில் பல விதிமீறல்கள் நடைபெறுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதையடுத்து ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் போட்டி போட்டுக் கொண்டு வாக்காளர்களுக்கு பணம் வழங்கி வருவதாக கூறியுள்ள விஜயகாந்த், பணப்பட்டுவாடா பற்றி செய்தி சேகரித்த செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் அராஜக செயல்களும் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தல் அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விதிமீறல்களை தடுக்காமல் வேடிக்கை பார்த்து வருவதாகவும் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனை அடுத்து வீடியோ ஆதாரத்துடன் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள விஜயகாந்த், ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த முடியவில்லை என்றால் தேர்தல் எதற்கு என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.