சட்டசபையிலிருந்து தி.மு.க. எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
By: Monisha Wed, 16 Sept 2020 1:37:16 PM
புதிய கல்வி கொள்கை குறித்து முதலமைச்சரின் பதில் திருப்தி அளிக்காததால் தி.மு.க. எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டசபை கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. மூன்று நாட்கள் கொண்ட இந்த தொடரின் கடைசிநாள் கூட்டம் இன்று பெறுகிறது. இன்றய கூட்டத்தில் புதிய கல்வி கொள்கை குறித்து தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அப்போது அவர் பேசியதாவது:- குலக்கல்வி திட்டத்தின் மறு உருவம் புதிய கல்விக் கொள்கை என்றும், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டும் என்று கூறிய ஸ்டாலின், புதிய கல்விக்கொள்கை குறித்து விவாதிப்பதற்காக நாளை சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். புதிய கல்வி கொள்கை குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அப்போது, புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய்வதற்காக 2 குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். இந்த குழுக்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். முதலமைச்சரின் பதில் திருப்தி அளிக்காததால் தி.மு.க. எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.