அதிமுக மாநாட்டை கண்டு திமுகவிற்கு நடுக்கம்... எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
By: Nagaraj Thu, 17 Aug 2023 11:15:09 AM
கோவை: அதிமுக மாநாட்டை கண்டு திமுக பயந்து நடுங்கி உள்ளது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
அ.தி.மு.க. மாநாட்டைக் கண்டு பயந்து, நடுங்கி, மாநாடு நடக்கும் அதே நாளில் நீட்-க்கு எதிரான போராட்ட அறிவிப்பை தி.மு.க. வெளியிட்டு இருப்பதாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தேர்தலின் போது தி.மு.க. அளித்த பொய் வாக்குறுதியை நம்பி நீட் தேர்வுக்கு ஆயத்தமாகாமல் மாணவர்கள் இன்னுயிரை இழப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
டெல்டாகாரன் என்ற வீர வசனம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் பெங்களூர் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க சென்ற போது தம்மை வரவேற்று பொக்கே கொடுத்த கர்நாடக நீர்ப்பாசன அமைச்சரிடம் காவிரி நீரை திறந்து விடுமாறு கேட்காதது ஏன் என்று இ.பி.எஸ். கேள்வி எழுப்பியுள்ளார்.