தூர்வாரப்பட்டுள்ளதால் நீர்நிலைகளில் குளிக்காதீர்கள்; மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்
By: Nagaraj Thu, 27 Aug 2020 11:48:15 AM
பல்வேறு இடங்களில் தூர்வாரப்பட்டுள்ளதால், அதிக பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் தண்ணீர் தேங்கி உள்ளதால் நீர்நிலைகளில் யாரும் குளிக்க வேண்டாம் என கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தென்மேற்கு பருவ மழையால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளம், குட்டை, ஆறு போன்ற நீர்நிலைகளில் அதிகளவில் தண்ணீர் நிரம்பியுள்ளது.
கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களிலிருந்து, தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால், பொதுமக்கள் யாரும், நீர் நிலைகளில் விளையாடவோ, குளிக்கவோ கூடாது. பெற்றோர் தங்களது குழந்தைகளை வெளியில் சென்று, நீர்நிலைகளில் குளிக்க அனுமதிக்கக்கூடாது.
மேலும், பெற்றோரின் தொடர் கண்காணிப்பிலேயே குழந்தைகள் இருக்க
வேண்டும். குறிப்பாக, சிறுவர்கள் யாரும் ஆறு, கால்வாய், ஏரி, குளம், குட்டை
போன்ற நீர்நிலைகளில் குளிக்க வேண்டாம்.
தெரிந்த இடங்களாக
இருந்தாலும், கடந்த ஒரு ஆண்டாக குடிமராமத்து பணிகள் மூலம், பல்வேறு
இடங்களில் தூர்வாரப்பட்டுள்ளதால், அதிக பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில்
தண்ணீர் தேங்கி உள்ளதால், கண்டிப்பாக யாரும் குளிக்க வேண்டாம். இது
குறித்து புகார் மற்றும் தகவல் தெரிவிக்க, மாவட்ட கட்டுப்பாட்டு அறை இலவச
தொலைபேசி எண், 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்
தெரிவித்துள்ளார்.