எனது தந்தை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் - பிரணாப் முகர்ஜி மகன் அறிவிப்பு
By: Karunakaran Thu, 13 Aug 2020 2:36:26 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என கொரோனா பாரபட்சமின்றி அனைவரையும் தாக்கி வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மருத்துவ பரிசோதனைக்காக சென்றபோது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் உள்ள ரத்தக்கட்டியை நீக்குவதற்கு ஆபரேசன் நடைபெற்றது. இந்த அறுவை சிகிச்சைக்கு பின், டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் வென்டிலெட்டர் உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக கூறப்பட்டது.
தற்போது ராணுவ மருத்துவமனை சார்பில் வெளியான இரண்டு மூன்று அறிக்கையில், பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் இன்று காலையில் இருந்து டுவிட்டரில் #ripPranabMukherjee என் ஹேஸ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது.
பிரணாப் முகர்ஜி உடல்நலம் குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. தற்போது அவரது மகன் அபிஜித் முகர்ஜி, எனது தந்தை இன்னும் உயிருடன் இருக்கிறார், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், பிரணாப் முகர்ஜி உடல்நலம் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.