குழந்தைகள் சிகிச்சை மருத்துவர் கொரோனா பாதிப்பால் பலி
By: Monisha Tue, 07 July 2020 2:35:10 PM
தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 978 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 66 ஆயிரத்து 571 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் இதுவரை 1,571 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 23,708 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 1,068 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. 3,601 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. 385 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 12 சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களில் 455 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று விருதுநகர், சிவகாசி மற்றும் கிராமப்பகுதிகளில் 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதில் 40 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் நெல்லை அரசு ஆஸ்பத்திரி பரிசோதனை மையத்தில் இருந்து வெளியிடப்பட்டது. இதன்மூலம் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,175 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 60 வயது கூரியர் நிறுவன முகவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதேபோல சிவகாசியை சேர்ந்த பிரபல குழந்தைகள் சிகிச்சை மருத்துவர் கொரோனா பாதிப்பால் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். இதன் மூலம் இந்த மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.