மருத்துவர்கள், மருத்துவ வசதி இல்லை; கொரோனா நோயாளிகள் குற்றச்சாட்டு
By: Nagaraj Sun, 12 July 2020 9:42:41 PM
கொரோனா நோயாளிகள் குற்றச்சாட்டு... மருந்துகள், மருத்துவர்கள், மருத்துவ வசதிகள் கூட இல்லாத பாலிடெக்னிக் கல்லூரியில் தங்களை தங்க வைக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள கொரோனா நோயாளிகளின் குமுறல் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கதிர்காமத்தில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாள்தோறும் தோய் அதிகரித்து வருவதால் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் சிகிச்சை அளிக்க அரசு ஏற்பாடு செய்தது. அந்த வகையில் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் இருந்த நோயாளிகளை மணக்குள விநாயகர் தனியார் மருத்துவக் கல்லூரியில் அனுமதிப்பதாக கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால் அந்த நோயாளிகளை அவர்கள் சொன்ன இடத்தில் தங்க வைக்காமல் அங்குள்ள
பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் வகுப்பறையில் தங்க வைத்துள்ளதாகவும்,
அங்கு போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை என்றும், மருத்துவ வசதி, மருந்துகள்,
மருத்துவர்கள் கூட இல்லை என்றும், அதிகளவிலான விஷப்பூச்சிகள் இங்கு
வருவதால் உயிர் பயத்துடன் இருப்பதாகவும், எங்களை மருத்துவக்கல்லூரிக்கு
அழைத்துச் செல்வதாக கூறி இதுபோன்ற இடத்தில் தங்க வைத்துள்ளது வேதனை
அளிப்பதாக அங்குள்ள கொரோனா நோயாளிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
எனவே
உடனடியாக அரசு தங்களை மருத்துவக்கல்லூரி அனுமதித்து சிகிச்சை அளிக்க
வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி
வருகிறது.