உள்நாட்டு விமான சேவை வரும் 25ம் தேதி தொடங்குகிறது
By: Nagaraj Wed, 20 May 2020 8:29:02 PM
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, உள்நாடு மற்றும் வெளிநாடு விமான சேவைக்கு கடந்த மார்ச் 25 முதல் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை துவக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரயில், விமான சேவைகள் நிறுத்தப்பட்டது. இதில் முதல்கட்ட ஊடரங்கின் போது, விமான டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணத்தை திருப்பி அளிக்கவும் விமான சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டது.
தற்போது 4ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மே 25 முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து துவக்கப்படும். இதற்காக அனைத்து விமான நிறுவனங்கள் மற்றும் விமான சேவை நிறுவனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக குறைந்தளவு விமான சேவைகள் அனுமதிக்கப்படும். பின்னர் படிப்படியாக விமான சேவை முழு அளவில் விரிவுபடுத்தப்படும். விமான நிறுவனங்கள், ஊழியர்கள், பயணிகளுக்கான புதிய விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.