டிடிஎஃப் வாசனின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவு
By: vaithegi Tue, 03 Oct 2023 12:56:43 PM
சென்னை: ஜாமீன் கிடைக்குமா? ... பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலு செட்டி சத்திரம் அருகே பைக்கில் சென்ற போது வீலிங் செய்ய முயன்றதில் நிலை தடுமாறு கீழே விழுந்து பெரும் விபத்தில் சிக்கினார். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் (IPC 279/337), டி.டி.எஃப் வாசன் மீது பாலுசெட்டி சத்திரம் போலீஸ் வழக்கு பதிவு செய்தது.
இதையடுத்து டிடிஎஃப் வாசன் மீது ஏற்கனவே 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 பிரிவுகள் சேர்க்கப்பட்டு உள்ளது. பிணையில் வர முடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை செய்தது.
இதற்கு இடையே டிடிஎஃப் வாசனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவிட்டார். இதனையடுத்து டிடிஎஃப் வாசன் 2 முறை ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நிலையில், அம்மனுக்கல் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதனிடையே டிடிஎஃப் வாசனின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிகிறது. இன்றுடன் நீதிமன்றக் காவல் முடிவதால் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் டிடிஎஃப் வாசன். சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்ததை அடுத்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார். இன்றுடன் டிடிஎஃப் வாசனின் நீதிமன்றக் காவல் முடிவடைவதால் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.