ஊரடங்கு காரணமாக விமான போக்குவரத்துத் துறைக்கு சுமார் ரூ.6.32 லட்சம் கோடி நஷ்டம்
By: Monisha Thu, 11 June 2020 4:13:01 PM
கொரோனா வைரஸ் பரவலால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக விமான போக்குவரத்துத் துறைக்கு இந்த ஆண்டு சுமார் ரூ.6.32 லட்சம் கோடி நஷ்டம் ஏற்படும் என தெரிய வந்துள்ளது. கனடாவைச் சேர்ந்த விமான தொழில் கூட்டமைப்பான ஐஏடிஏ நடத்திய ஆய்வில் இந்த முடிவுகள் தெரிய வந்துள்ளது.
2020-ம் ஆண்டில் விமான நிறுவனங்களின் வருமானம் 50 சதவீத அளவுக்கு சரியும். கடந்த 2019-ம் ஆண்டில் விமான நிறுவனங்களின் வருமானம் 83,800 கோடி டாலராகும். இது தற்போது 41,900 கோடி டாலராக சரியும். வரும் 2021-ம் ஆண்டில் இத்துறையின் நஷ்டம் 1,580 கோடி டாலராகக் குறையும் என்றும், வருமானம் 59,800 கோடி டாலராக அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஐஏடிஏ கூட்டமைப்பில் 300-க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளன. தற்போது நாள் ஒன்றுக்கு இந்நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நஷ்டம் 23 கோடி டாலராகும். பயணிகளை ஈர்க்க கட்டண குறைப்பில் நிறுவனங்கள் ஈடுபட்டால் நஷ்டம் மேலும் அதிகரிக்கும்.
சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க விமான பயணிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தினால் அது செலவை அதிகரிக்கச் செய்யும். தற்போதைக்கு விமான எரிபொருள் விலை சற்று குறைவாக இருப்பது ஆறுதல் தரும் விஷயம். இவ்வாறு ஆய்வில் தெரியவந்துள்ளது.