பெங்களூருவில் பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் போல் ஓடிய தண்ணீர்
By: Nagaraj Mon, 22 May 2023 6:06:20 PM
பெங்களூரு: பலத்த மழை... கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு, ஹூப்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று பலத்த மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சுரங்கப்பாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் பல வாகனங்கள் பழுதாகி நின்றன. கே.ஆர் சர்க்கிள் சுரங்கப்பாதையில் குளம் போல தேங்கிய மழை நீரில் கார் ஒன்று சிக்கிக் கொண்டது. தகவல் அறிந்து விரைந்து சென்ற மீட்பு படையினர் காரினுள் இருந்த 7 பேரில் 6 பேரை உயிருடன் மீட்டனர்.
இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 23 வயதான பானுரேகா என்ற இளம் பெண் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்த முதலமைச்சர் சித்தராமையா ஆறுதல் தெரிவித்ததுடன் 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்.
இதனிடையே பெங்களூர் வித்யரண்யபுராவில் உள்ள பழைய கட்டடம் ஒன்று இடிந்து மண்ணோடு புதைந்தது. ஆயினும் அதில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.