பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இ-பாஸ்; அமைச்சர் தகவல்
By: Nagaraj Sat, 16 May 2020 9:34:25 PM
இ-பாஸ் வழங்கப்படும்... பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈரோட்டில் நிருபர்களிடம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:
வெளியூரில் தங்கியுள்ள மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத இ-பாஸ் வழங்கப்படும். வெளிமாவட்டங்களில், தனியார் பள்ளி விடுதிகளில் தங்கி படித்து வரும் மாணவர்களை 3 நாட்களுக்கு முன்பே அழைத்து வர ஏற்பாடு செய்யப்படும். அவர்களுக்கு உணவு வசதியும் செய்து தரப்படும்.
பள்ளி கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே, வெளிமாவட்டங்களில் தங்கியுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், 10ம் வகுப்பு தேர்வை முன்னிட்டு, வரும் 21ம் தேதிக்குள் பணியாற்றும் மாவட்டத்திற்கு திரும்ப வேண்டும் என பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அவர்கள், சொந்த மாவட்டத்திற்கு திரும்பியதை, தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்யவும், திரும்பாத ஆசிரியர்களின் விவரங்களை 21ம் தேதி காலை காலை 11 மணிக்குள் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது.