சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை இடியுடன் கூடிய மழை
By: Monisha Fri, 10 July 2020 09:20:00 AM
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நிலவும் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும், சென்னை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும். என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று அதிகாலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. மேலும், பல்லாவரம், தாம்பரம், சேலையூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி என புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது.
வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த சென்னை புறநகர் வாசிகள் தற்போது பெய்த மழையால் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.