இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
By: vaithegi Sun, 25 Sept 2022 10:20:24 AM
இந்தோனேசியா : இந்தோனேசியா நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்தோனேசியா நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஆச்சே மாகாணத்தில் நேற்றிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆச்சே மாகாணத்தின் மெயுலாபோ நகரை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனை அடுத்து இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 22 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அந்த நாட்டு தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஆச்சே மாகாணம் முழுவதும் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின்போது வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
மேலும் இந்த பயங்கர நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிர்சேதங்கள் குறித்த தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இதேபோன்று இந்நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.