இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூரில் இன்று அடுத்தடுத்து நிலநடுக்கம்
By: Karunakaran Tue, 07 July 2020 10:16:04 AM
சிங்கப்பூரில் இன்று அதிகாலை 4.24 மணியளவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சிங்கப்பூர் நகரின் தென்கிழக்கே 1,102 கிலோ மீட்டர் தொலைவை இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தோனேசியா நாட்டிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியா நாட்டின் சிமராங் பகுதியில் இருந்து வடக்கே 142 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.3 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக வீடுகள் குலுங்கின.
சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டாலும், சுனாமி எச்சரிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய 450 எரிமலைகள் கொண்ட பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலும் இன்று அருணாச்சாலபிரதேச மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அருணாச்சாலபிரதேச மாநிலத்தின் டவாங் பகுதியை மையமாக கொண்டு இன்று அதிகாலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாலை 1.33 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.4 பதிவாகியுள்ளது.