மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
By: Karunakaran Thu, 25 June 2020 6:35:02 PM
உலகம் முழுவதும் கொரோனா பரவி மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், பல்வேறு இடங்களில் இயற்கை பேரிடர்களாலும் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில், மெக்சிகோ நாட்டின் தெற்குபகுதியில் ஒக்சாக்கா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியது.
ஒக்சாக்கா மட்டும் இன்றி 10க்கும் மேற்பட்ட மாகாணங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலநடுக்கம் காரணமாக பல இடங்களில் வீடுகள், வணிக வளாகங்கள் உள்பட ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்து நாசமாகின.
ஒக்சாக்கா மாகாணத்தில் 5 ஆஸ்பத்திரிகள் பலத்த சேதம் அடைந்ததால், பலர் காயமடைந்தனர். மேலும் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகி, இடிபாடுகளில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த இடிபாடுகளில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பல இடங்களில் கட்டிட இடிபாடுகள் காரணமாக பலர் சிக்கி கொண்டனர். இதனால் இடிபாடுகளில் சிக்கியதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்பதற்காக பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.