இலங்கையில் பொருளாதார நெருக்கடி...அனைத்து பள்ளிகளுக்கும் ஜூலை 11 வரை விடுமுறை
By: vaithegi Tue, 05 July 2022 11:13:30 AM
இலங்கை: அண்டை நாடான இலங்கை, கடுமையான அன்னியச் செலாவணி பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்ற நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
மேலும் எண்ணெய் நிறுவனங்களுக்கு உரிய நிலுவையை வழங்காததால், அவை எரிபொருளை வழங்க மறுக்கின்றன. இதனால், பொது போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே அரசு வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த எரிபொருள் தட்டுப்பாட்டால் பள்ளிகள் இரு வாரங்களுக்கு மூடப்பட்டன.
நேற்று பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளும் வரும் 11ம் தேதி வரை மூட அரசு உத்தரவிட்டு உள்ளது
எரிபொருள் தட்டுப்பாட்டால் பள்ளிகளுக்கு மாணவர்கள், ஆசிரியர்கள் செல்லும் அளவிற்கு போதிய வாகன வசதி இல்லாததால் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது .மேலும் விடுபட்ட பாடங்களை அடுத்து வரும் விடுமுறை காலத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
மேலும் ஆன்லைன் வகுப்புகளை எடுக்குமாறு இலங்கை கல்வித் துறை செயலர் நிஹால் ரன்சிங்கே அறிவுறுத்தி உள்ளார். ஆன்லைனில் கல்வி கற்க ஏதுவாக காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரத்தை துண்டிக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.