Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உப்பளத் தொழிலாளர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குக ... எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

உப்பளத் தொழிலாளர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குக ... எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

By: vaithegi Sat, 04 Feb 2023 1:56:41 PM

உப்பளத் தொழிலாளர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குக ...  எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல் ..... எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்புடப்பட்டுள்ளதாவது, "வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் கடந்த சில நாட்களாக தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து கொண்டு வருகிறது. இந்த கன மழைக்கு சுமார் 2 லட்சம் ஏக்கரில் பயிரிட்டு அறுவடைக்கு காத்திருக்கும் நெற்கதிர்களும், ஊடுபயிராக பயிரிடப்பட்டிருந்த உளுந்து போன்ற பயிர்களும் மழையில் நனைந்து வீணாகியுள்ளது. மேலும், அறுவடை செய்து, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்குக் கொண்டு செல்லப்படும் நிலையில் வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து வீணாகியுள்ளன.

இதையடுத்து மழை நீரில் அழுகிய, அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிர்களை கணக்கெடுக்க உடனடியாக அதிகாரிகளை அனுப்பி கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணத்தை அறிவிக்க வேண்டும் எனவும், நெல் பயிரிட்ட ஒரு ஏக்கர் நிலத்திற்கு குறைந்தபட்சம் 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும், மழையால் நனைந்து பாதிக்கப்பட்ட நெல்மணிகளை உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டுவரும் மழையில் நனைந்த நெல்லின் ஈரப் பதத்தை கணக்கில் கொள்ளாமல் அனைத்து நெல் மூட்டைகளையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இந்த விடியா அரசு பொறுப்பேற்ற பின், கடந்த 2021 மற்றும் 2022-ம் ஆண்டு பருவ மழைக் காலங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் மழையால் நனைந்து வீணாகியுள்ளன. எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் போதுமான அளவு தார்ப்பாய் இருப்பு வைத்து, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அனைத்தும் மழையால் நனையாமல் பார்த்துக்கொள்ள கொள்முதல் நிலையங்களுக்குத் தேவையான தார்ப்பாயினை இந்த விடியா அரசு வழங்க வேண்டும் என்று வற்புறுத்துகிறேன். ஏக்கர் ஒன்றுக்கு சுமார் ஆயிரக்கணக்கில் செலவழித்தது மட்டுமின்றி, தங்களது கடைசி வியர்வைத் துளி வரை நிலத்தில் சிந்தி பாடுபட்ட விவசாயிக்கு, ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 30,000/- ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.

edappadi palaniswami,relief ,எடப்பாடி பழனிச்சாமி ,நிவாரணம்

மேலும் மத்திய அரசு நிதி வர வேண்டும்; காப்பீட்டுத் திட்டம் மூலம் நிதி வழங்கப்படும் என்றெல்லாம் தாமதப்படுத்தாமல், எங்கள் ஆட்சியின்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக மாநில நிதியில் இருந்து நிதியை விடுவித்தது போல், இந்த விடியா அரசும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று இந்த விடியா அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன். கடந்த மழைக் காலங்களில் சரியாக கணக்கெடுக்காமல் விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டதையும், நிவாரணம் வழங்கியதில் பல்வேறு தவறுகள் நடைபெற்றதையும், காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் நிவாரணம் வழங்கியதில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றதையும், நான் அறிக்கைகள் வாயிலாகவும், சட்டமன்றப் பேரவையிலும் சுட்டிக்காட்டியபோதெல்லாம், விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாததுபோல் இந்த விடியா அரசும், அதன் முதலமைச்சரும், அமைச்சர்களும் எனக்கு பதில் அளிப்பதையே கடமையாகக் கொண்டிருந்தனர். எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

மேலும், வேளாண் பெருமக்களுடன், கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றம் காரணமாக நமது மீனவர்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கடலுக்குச் செல்ல இயலாத நிலையில், வருமானம் இன்றி மிகவும் சிரமப்பட்டுக் கொண்டுள்ளனர். மேலும், உப்பளங்களில் நீர் புகுந்து உப்பளத் தொழிலாளர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, மீனவர்கள் மற்றும் உப்பளத் தொழிலாளர்களுக்கும் உடனடியாக தேவையான நிவாரணங்களை வழங்க திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags :