கொரோனாவை தடுப்பதில் எடியூரப்பா அரசு தோல்வி அடைந்து விட்டது - டி.கே.சிவக்குமார்
By: Karunakaran Fri, 17 July 2020 11:36:58 AM
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா பரவலை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக மாநிலத்தில் கொரோனா பாதிப்பும், பலி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் கர்நாடக அரசு விழிபிதுங்கி நிற்கிறது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு கூறியதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பேட்டி அளித்தபோது, கொரோனாவிடம் இருந்து மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று மந்திரி ஸ்ரீராமுலு கூறியுள்ளார். அவர் இப்படி பொறுப்பற்ற முறையில் பேசுவது சரியல்ல. இதனால் அவர் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினார்.
மேலும், ஸ்ரீராமுலு கூறியது அவரது தனிப்பட்ட கருத்து அல்ல. அரசின் கருத்தை தான் அவரும் கூறியுள்ளார். கொரோனாவை தடுப்பதில் எடியூரப்பா அரசு தோல்வி அடைந்து விட்டது. இதனால் கர்நாடக அரசை கலைத்து விட்டு மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.