உரிய ஆதாரம் இல்லாமல் ரூ.2,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக கூறியது தவறு - எடியூரப்பா
By: Karunakaran Mon, 27 July 2020 12:13:40 PM
கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா பதவி ஏற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில், பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா மேலிட தலைவர்களின் ஆதரவு இருக்கும் வரை நான் முதல்-மந்திரி பதவியில் நீடிப்பேன். இன்னும் 3 ஆண்டுகள் பதவி காலம் உள்ளது. நான் சிறப்பாக செயல்பட பிரதமர் மோடி எனக்கு முழு அதிகாரம் கொடுப்பார் என நம்பிக்கை உள்ளதாக கூறினார்.
நான் முதல்-மந்திரி பதவி ஏற்ற பிறகு பெரு வெள்ளம் உண்டானது. அதை மத்திய அரசின் உதவியுடன் சிறப்பான முறையில் நிர்வகித்தேன். அதன் பிறகு 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தது. அதில் வெற்றி பெற்றோம். நான் இந்த வயதிலும் ஓய்வின்றி உழைத்து வருகிறேன் என எடியூரப்பா கூறினார்.
கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். அவர் முறைகேடு குற்றச்சாட்டை கூறும்போது, உரிய ஆதாரங்களை வெளியிட வேண்டும்.உரிய ஆதாரம் இல்லாமல் ரூ.2 ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டியது முற்றிலும் தவறு.
கொரோனாவை தடுக்க கர்நாடக அரசு எடுத்த நடவடிக்கைகளை பிரதமர் பாராட்டினார். இப்போது பெங்களூருவில் பாதிப்பு அதிகரித்துள்ளது. சில மாநிலங்கள் அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைத்துள்ளது. ஆனால் நாங்கள் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு பைசா கூட குறைக்காமல் வழங்கி வருகிறோம் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.