கர்நாடகத்தில் கொரோனா காரணமாக ஒரே நாளில் 8 பேர் உயிரிழப்பு
By: Karunakaran Wed, 24 June 2020 12:16:42 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 9,245 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது அங்கு புதிதாக 322 பேர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால். அங்கு கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 9,567 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடகமாநிலத்தில் இதுவரை 6,004 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று 274 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கர்நாடகத்தில் புதிதாக கொரோனா பாதித்தவர்களில் 107 பேர் பெங்களூரை சேர்ந்தவர்கள். தற்போது பெங்களூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் ,மக்கள் பீதியடைந்துள்ளனர். கர்நாடகத்தில் நேற்று வரை 5 லட்சத்து 26 ஆயிரத்து 538 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனன.
பெங்களூருவில் 3-வது நாளாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளதால், அங்குள்ள மக்கள் கொரோனாவால் பீதியடைந்துள்ளனர். கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் 8 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். இதில் 6 பேர் பெங்களூரை சேர்ந்தவர்கள். பெங்களூருவில் இதுவரை கொரோனா காரணமாக 74 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
நேற்று கொரோனாவுக்கு 8 பேர் பலியாகியதில், பெங்களூரு நகரை சேர்ந்த 47 வயது பெண், 85 வயது மூதாட்டி, 81 வயது முதியவர், 32 வயது இளைஞர், 67 வயது முதியவர், 40 வயது நபர், பல்லாரியை சேர்ந்த 85 வயது மூதாட்டி, தட்சிண கன்னடாவை சேர்ந்த 70 வயது முதியவர் ஆகியோர் அடங்குவர். இதனால் கர்நாடகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளது.