பா.ஜ.க.வில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஏக்நாத் கட்சே
By: Karunakaran Sat, 24 Oct 2020 4:46:33 PM
மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க.வில் பலம்பெற்ற தலைவராக இருந்த ஏக்நாத் கட்சே, கடந்த பா.ஜ.க. ஆட்சியின் போது மாநில வருவாய்த்துறை மந்திரியாக இருக்கையில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட அவருக்கு கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
கட்சியின் மீது அதிருப்தியில் இருந்த அவர், கடந்த புதன்கிழமை பா.ஜ.க.வில் இருந்து விலகியதாக அறிவித்தார். மேலும் முன்னாள் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தனது வாழ்க்கையை அழிக்க முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினார். அன்றே ஏக்நாத் கட்சே தேசியவாத காங்கிரசில் இணைவார் என அந்த கட்சியின் மாநில தலைவரான மந்திரி ஜெயந்த் பாட்டீல் அறிவித்தார்.
தற்போது, மும்பையில் நடந்த விழாவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் முன்னிலையில் ஏக்நாத் கட்சே அந்த கட்சியில் நேற்று இணைந்தார். மந்திரி ஜெயந்த் பாட்டீல், ஏக்நாத் கட்சேவுக்கு சால்வை அணிவித்து அவரை கட்சியில் வரவேற்றார். கட்சேவுடன் அவரது ஆதரவாளர்கள் சுமார் 70 பேரும் தேசியவாத காங்கிரசில் இணைந்தனர். தேசியவாத காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்ட சரத்பவாருக்கு ஏக்நாத் கட்சே நன்றி தெரிவித்தார்.
மேலும் அப்போது ஏக்நாத் கட்சே, நான் 40 ஆண்டுகளாக அரசியலில் உள்ளேன். நான் வளர்த்த கட்சியில் இருந்து வெளியேறுவேன் என நினைத்துக்கூட பார்த்தது கிடையாது. என்மீது மானபங்க வழக்குப்பதிவு செய்யப்பட்டது. என் வாழ்நாளில் 4 ஆண்டுகளை வீணடித்தேன். என்மீது நிலஅபகரிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எனக்கு பல கட்சிகளில் இருந்து அழைப்பு வந்தது. ஆனால் எனது ஆதரவாளர்கள் தேசியவாத காங்கிரசில் இணைய வேண்டும் என விரும்பினர். பா.ஜ.க.வுக்கு உழைத்ததை விட 2 மடங்கு அதிகமாக தேசியவாத காங்கிரசுக்காக உழைப்பேன் என்று கூறினார்.