Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சட்டசபை தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் தமிழகம் வருகை

சட்டசபை தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் தமிழகம் வருகை

By: Monisha Fri, 18 Dec 2020 3:02:10 PM

சட்டசபை தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் தமிழகம் வருகை

தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது. தமிழகத்துடன் புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. இதற்காக 2021-ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பியவர்களை புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வருகிற ஜனவரி மாதம் 5-ம் தேதி புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக சமூக இடைவெளியை கடைபிடிக்க கூடுதலாக வாக்குசாவடிகளை உருவாக்குவது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் நான்கு மாத காலமே உள்ளதால் தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவதா அல்லது இரண்டு கட்டமாக நடத்துவதா என்பது குறித்தும் தேர்தல் ஆணையம் முடிவு செய்ய உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்துக்கும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்று அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் கருத்து கேட்க உள்ளனர்.

assembly,election,tasks,voter,party ,சட்டசபை,தேர்தல்,பணிகள்,வாக்காளர்,கட்சி

இதன்படி இந்திய தேர்தல் ஆணைய பொதுச்செயலாளர் உமேஷ் சின்கா தலைமையிலான உயர்மட்ட குழு வருகிற 21-ம் தேதி சென்னை வருகிறார்கள். சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகளை அழைத்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். அவர்களிடம் ஒவ்வொரு கட்சி பிரதிநிதிகளும் கோரிக்கை மனுக்களை கொடுக்க உள்ளனர்.

அதன் பிறகு தேர்தல் ஆணைய அதிகாரிகள் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளை சந்தித்து பேச உள்ளனர். வருகிற 22-ம் தேதி தமிழக அரசின் உயர் அதிகாரிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமி‌ஷனர், உளவுப்பிரிவு அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

தமிழகத்தில் தேர்தல் நடத்த என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் விளக்கி கூற உள்ளனர். சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், பொது பிரச்சினைகள், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்க உள்ளனர். இரண்டு நாட்கள் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னையில் தங்கியிருந்து தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளதால் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இதற்கான ஏற்பாடுகளை முன்னின்று கவனித்து வருகிறார்.

Tags :
|
|