மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிக்கு உயிர் வந்தது
By: Nagaraj Wed, 19 Apr 2023 7:38:32 PM
மைசூரு: பிணவறையில் வைக்கப்பட்டவருக்கு உயிர் இருந்தது... தேர்தல் அதிகாரி ஒருவர் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டு, பிணவறையில் வைக்கப்பட்டிருந்த போது, அங்கு அவருக்கு உயிர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சாமராஜ்நகர் மாவட்டம், ஹனூர் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தேர்தல் அதிகாரி ஜகதீஷ், பள்ளியொன்றில் தேர்தல் பயிற்சித் திட்டத்தை முடித்துக்கொண்டு படிகளில் இறங்கி வரும் போது தவறி விழுந்தார்.
தலையில் பலத்த காயமடைந்து அங்கேயே நினைவிழந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறிவிட்டனர்.
உடனடியாக விரைந்துச் சென்ற காவல்துறை உதவி ஆணையர், சம்பவம் குறித்து உடன் இருந்த ஊழியர்களிடம் கேட்டறிந்தார். விசாரணை முடிந்த பிறகு, ஜகதீஷ் உடல் மருத்துவமனையிலிருந்து உடல் கூறாய்வுக்காக பிணவறைக்கு மாற்றப்பட்டது. அப்போது அங்கு வந்த உறவினர்கள், உடலைப்பிடித்து அழுதபோது, அவரது உடலில் அசைவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து மருத்துவர்களிடம் தெரிவித்ததையடுத்து, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரோடு இருப்பதை அறிந்து உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்தனர்.
தலையில் பலத்த காயமடைந்த ஜகதீஷ் நினைவில்லாமல் மயங்கி விழுந்த நிலையில், அவர் மரணமடைந்துவிட்டதாக பிணவறைக்குக் கொண்டு செல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்த தாசில்தார் உத்தரவிட்டுள்ளார்.