யானைகள் வழித்தடத்தை மறைத்து வாகன நிறுத்தம்... வனத்துறை எச்சரிக்கை
By: Nagaraj Sat, 29 Apr 2023 11:29:16 AM
கோவை: யானை வழித்தடத்தை மறைத்து வாகன நிறுத்தம்...கோவை மாவட்டம் வால்பாறை அருகே அதிரப்பள்ளி சாலையில் யானைகளின் வழித்தடத்தை மறைத்து சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்தியதால் வனப்பகுதியில் இருந்து வந்த யானைக்கூட்டம் ஒன்று சாலையைக் கடந்து செல்ல முடியாமல் திணறின.
வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் சாலக்குடி செல்லும் வழித்தடத்தில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை காண செல்லும் போது தங்களின் வாகனங்களை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு செல்கின்றனர்.
இந்நிலையில் தண்ணீர் குடிப்பதற்காக வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் வெளியேறிய யானைகள் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததன் காரணமாக சாலையை கடக்க முடியாமல் திணறின.
எனவே யானைகள் செல்வதற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் வாகனங்களை சாலையில் நிறுத்த வேண்டாம் எனவும் மீறி நிறுத்துபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.