- வீடு›
- செய்திகள்›
- மெக்சிகோவில் மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 11 பேர் உயிரிழப்பு
மெக்சிகோவில் மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 11 பேர் உயிரிழப்பு
By: Karunakaran Tue, 29 Sept 2020 09:28:54 AM
மெக்சிகோ நாட்டின் மத்திய பகுதியில் உள்ள குவானாஜுவாடோ மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதனால் அங்கு தொழில் போட்டி காரணமாக போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக பலர் உயிரிழந்து வருகின்றனர்.
போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை கண்டறிந்து அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள ஜரல் டெல் புரோகிரெசோ நகரில் உள்ள ஒரு மதுபான விடுதியில் நேற்று காலை பெண்கள் உள்பட ஏராளமான இளைஞர்கள் மது அருந்திக்கொண்டிருந்தனர்.
அப்போது கார்களில் வந்து இறங்கிய மர்ம கும்பல் மதுபான விடுதிக்குள் நுழைந்தனர். பின்னர் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் அங்கு பெரும் பதற்றமும் பீதியும் உருவானது. மதுபான விடுதிக்குள் இருந்தவர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனாலும் அந்த மர்ம கும்பல் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 4 பெண்கள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.