பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை 70 ஆண்டுகள் ஆட்சி செய்து இரண்டாம் எலிசபெத் சாதனை
By: Monisha Tue, 14 June 2022 3:13:19 PM
லண்டன்: பிரிட்டனில் இரண்டாம் எலிசபெத் ஆட்சி பொறுப்பேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற இயற்பெயர் கொண்ட ராணி இரண்டாம் எலிசபெத், தனது தந்தை ஜார்ஜ் இறந்த பின், 1952ம் ஆண்டு பிரிட்டனின் மகாராணியாக முடிசூடிக் கொண்டார். அப்போது அவருக்கு 25 வயது. அவரது முடிசூட்டு விழா உலகளவில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்ட முதல் பிரம்மாண்ட நிகழ்வு ஆகும்.
பிரிட்டன் வரலாற்றில் விக்டோரியா மகாராணி 63 ஆண்டுகாலம் ஆட்சிபுரிந்த நிலையில், அதை முறியடித்து 70 ஆண்டுகள் அரியணையை அலங்கரித்து இரண்டாம் எலிசபெத் வரலாற்று சாதனை புரிந்துள்ளார். பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை 70 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே மகாராணி என்ற பெருமையை இரண்டாம் எலிசபெத் பெற்றுள்ளார். தாய்லாந்து அரசர் பூமிபோல் அதுல்யதேஜ், 1927-2016 வரை, 70 ஆண்டுகள், 126 நாட்கள் அரசராக இருந்தார். அந்த சாதனையை தற்போது இரண்டாம் எலிசபெத் ராணி முறியடித்துள்ளார்.
இரண்டாம் எலிசபெத் பிரிட்டன் ராணி என்று அழைக்கப்பட்டாலும், 16 நாடுகளின் அரசியல் சாசன சட்டப்படி இவர் அரசியாக உள்ளார். மேலும் 54 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட காமன்வெல்த் எனப்படும், பிரிட்டிஷாரால் ஆளப்பட்ட நாடுகளின் கூட்டமைப்பிலும் பொறுப்பு வகிக்கிறார். பிரிட்டன் திருச்சபையின் மிக உயரிய கவர்னராகவும் உள்ளார். பிரிட்டன் பிரதமர்களை தேர்வு செய்வதில் ராணியின் பங்கு மிக முக்கியமானதாகும்.
இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் உள்பட 14 பிரிட்டன் பிரதமர்களின் காலகட்டங்களில் அரசியாக இரண்டாம் எலிசபெத் பொறுப்பு வகித்துள்ளார். பிரிட்டனின் ராணியாக இரண்டாம் எலிசபெத், அரச பணியை ஏற்று 70 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதையொட்டி, 2022-ம் ஆண்டை பிளாட்டினம் ஜூபிலியாக ராயல் அரண்மனை கொண்டாடி வருகிறது.