ஜப்பானில் அவசரநிலை பிரகடனம் முடிவுக்கு வருகிறது - பிரதமர் ஷின்ஜோ அபே அறிவிப்பு
By: Monisha Tue, 26 May 2020 09:48:34 AM
ஜப்பான் நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 7 முதல் அவரச நிலை பிரகடனம் செய்யப்பட்டது. முதலில் 7 மாகாணங்களில் அமலில் இருந்த ஊரடங்கு பின்னர் ஏப்ரல் 16 ஆம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. உணவு விடுதிகள், வணிக நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன.
தற்போது ஜப்பானில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவு வேகம் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் மொத்தம் 16 ஆயிரத்து 581 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 830 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக நேற்று மட்டும் நாடு முழுவதுமே மொத்தம் 31 பேருக்கு தான் புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தலைநகர் டோக்கியோவில் செய்தியாளர்களை சந்தித்த ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே கூறியதாவது:- 'நாடு முழுவதும் அமலில் உள்ள அவசரநிலை பிரகடனம் முடிவுக்கு வருகிறது. ஊரடங்கு அமல்படுத்தி ஒன்றரை மாதத்திற்கு மேலாகியுள்ளது. தற்போது நாம் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம்.
அவசரநிலையை தளர்த்துவதால் வைரஸ் முற்றிலும் அழிந்து விட்டது என அர்த்தம் அல்ல. கொரோனாவுக்கு எதிரான நமது போராட்டம் தொடரும்’’ என்றார்.