இத்தாலியில் அவசரநிலை அக்டோபர் மாதம் 15-ந் தேதி வரை நீட்டிப்பு
By: Karunakaran Thu, 30 July 2020 2:11:52 PM
ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலியும் ஒன்று. கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் கொரோனா காரணமாக இத்தாலியில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. கொரோனா பரவலைத் கட்டுப்படுத்த, முதலில் இத்தாலி தான் நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது.
கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் இத்தாலி கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவந்தது. இதனால் அங்கு 2 மாதங்களாக அமலில் இருந்த ஊரடங்கு கடந்த மே மாதம் முடிவுக்கு வந்தது. எனினும் தேசிய அவசர நிலை ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் நாளை அவசரநிலை முடிவுக்கு வர இருந்தது. இந்நிலையில் அதை அக்டோபர் மாதம் 15-ந் தேதி வரை நீட்டித்து பிரதமர் கியூசெப் கோண்டே உத்தரவிட்டார். கொரோனா நோயின் வீரியம் மற்றும் தேசிய சுகாதார சேவையில் அதன் தாக்கம் கணிசமாக குறைந்து விட்டாலும், வைரஸ் நம் நாட்டில் தொடர்ந்து பரவுகிறது என தரவுகள் கூறுவதால் அவசரநிலை நீட்டிக்கப்பட்டதாக கியூசெப் கோண்டே தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், தேசிய அவசர நிலையை நீட்டிப்பது அவசியமாகிறது. இது குறிப்பிட்ட பயணக் கட்டுப்பாடுகள், சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவதற்கான தேவைகளையும் உள்ளடக்கியதாகும் என்று கூறியுள்ளார்.