- வீடு›
- செய்திகள்›
- வளர்ந்து வரும் நாடுகள் கொரோனா தடுப்பூசி போட உலக வங்கிக்கு ரூ.90 ஆயிரம் கோடி நிதியுதவி
வளர்ந்து வரும் நாடுகள் கொரோனா தடுப்பூசி போட உலக வங்கிக்கு ரூ.90 ஆயிரம் கோடி நிதியுதவி
By: Karunakaran Thu, 15 Oct 2020 12:07:00 PM
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், வளர்ந்து வரும் நாடுகள், தங்கள் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு உலக வங்கி 12 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி வழங்குகிறது.அதாவது, சுமார் ரூ.90 ஆயிரம் கோடி ஆகும். 100 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு உதவும் வகையில் உலக வங்கி இதற்கான அனுமதியை அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக வளரும் நாடுகள் போராடுவதற்காக உலக வங்கி வழங்க முடிவு செய்துள்ள 160 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவியின் ஒரு பகுதி இதுவாகும். உலக வங்கியின் கொரோனா நெருக்கடி கால பதிலளிப்பு திட்டம், ஏற்கனவே 111 நாடுகளை சென்று அடைந்துள்ளது.
இதுகுறித்து உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் அவசர நிலைக்கு தீர்வு காண எங்களது விரைவான அணுகுமுறையை நாங்கள் விரைவுபடுத்துகிறோம். வளரும் நாடுகளுக்கு தடுப்பூசி நியாயமாகவும், சமமாகவும் கிடைப்பதற்காக இதைச்செய்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
உலக வங்கியின் தனியார் துறை கடன் வழங்கும் நிறுவனமான சர்வதேச நிதிக்கழகம், தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு 4 பில்லியன் அமெரிக்க டாலர் (அதாவது, சுமார் ரூ.30 ஆயிரம் கோடி) உலகளாவிய சுகாதார தளம் மூலம் முதலீடு செய்துவருவதாகவும் டேவிட் மால்பாஸ் தெரிவித்துள்ளார்.