பள்ளத்தில் சிக்கி மண் சரிந்து பலியான ஊழியர்கள் சடலமாக மீட்பு
By: Nagaraj Tue, 09 Aug 2022 10:45:39 PM
கனடா: கனடாவின் அஜாக்ஸ் பகுதியில் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மண்ணில் புதைந்த இந்த சம்பவம் மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒன்ராறியோ மாகாணத்தில் அஜாக்ஸ் நகரில் நேற்று பள்ளம் தோண்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நண்பகல் நேரம், எதிர்பாராத வகையில் குறித்த பள்ளமானது மொத்தமாக இடிந்து விழுந்துள்ளது.
இதில் இருவர் மொத்தமாக மண்ணுக்குள் புதைந்து போக, இருவர் காயங்களுடன் தப்பியுள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி ஒருவர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இன்னொருவர் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர்
வரவழைக்கப்பட்டு, புதைந்து போன ஊழியர்களை மீட்கும் பணி இரவு முழுவதும்
முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நள்ளிரவு 2.30 மணியளவில்
புதைந்து போன இரு தொழிலாளர்களின் உடல்களை மீட்டுள்ளதாக டர்ஹாம் பிராந்திய
பொலிசார் தெரிவித்தனர். இதனிடையே, தொழிலாளர்கள் நல அமைச்சகம் இந்த விவகாரம்
தொடர்பில் விசாரணை முன்னெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.