கோயம்பத்தூரில் வருகிற ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்
By: vaithegi Fri, 28 July 2023 3:35:54 PM
கோயம்பத்தூர் : தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் கோயம்பத்தூரில் வருகிற ஆகஸ்ட் 5 -ம் தேதி கலைஞர் நூற்றாண்டு சிறப்பு வேலை முகாம் நடைபெற இருக்கிறது. இம்முகாம் காலை 8 மணியளவில் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இம்முகாமில் உற்பத்தி துறை, ஜவுளித்துறை, இன்ஜினியரிங், கட்டுமானம், ஐ.டி துறை, ஆட்டோமொபைல்ஸ், விற்பனைத்துறை, மருத்துவம் சார்ந்த தனியார் துறைகள் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கின்றன. இதில் 10000க்கு மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றன.
இதையடுத்து இந்த முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப் படிப்பு, முதுகலை பட்டப் படிப்பு, தொழில் கல்வி பயின்றவர்கள், செவிலியர்கள்,பொறியியல் மாணவர்கள் என அனைத்து பிரிவினரும் கலந்து கொள்ளலாம்.
இம்முகாமில் அனைத்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் தங்களது சுயவிவரம்(Bio-data) மற்றும் கல்விச்சான்றுகளின் நகல்களுடன் கலந்து கொள்ளலாம். மேலும் அது மட்டுமில்லாமல் முகாமில் கலந்து கொண்டு பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. ஆனால் இந்த முகாமிற்கு வருவதற்கு முன் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் candidate login ல் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இதனை அடுத்து கூடுதல் விவரங்களுக்கு 9790199681 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.