அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அறிவிப்பு
By: Nagaraj Wed, 14 June 2023 08:21:04 AM
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுவிலக்கு மற்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். கரூர் மற்றும் சென்னை வீடுகளில் நடந்த சோதனை நிறைவடைந்தது.
இன்று அதிகாலை சென்னை பசுமைவழிச்சாலை வீட்டிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக அழைத்துச் செல்வதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது அதனை தொடர்ந்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர். அவர் எந்த வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இதுவரை உறுதியான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், சட்ட வல்லுநர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வீட்டில் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந் நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது எதிரொலியாக கரூரின் பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீசார் தயார் நிலையில் இருக்க மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் உத்தரவிட்டுள்ளார். அதைபோல அமைச்சர் செந்தில்பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை, ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் கூடுதல் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மற்றும் தமிழக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.