பெங்களூரில் ‘பேன்சி’ செல்போன் எண்ணுக்கு ஆசைப்பட்டு ரூ.65 ஆயிரத்தை இழந்த என்ஜினீயர்
By: Karunakaran Wed, 10 June 2020 10:45:46 AM
பெங்களூரு சிவாஜிநகரில் வசித்து வந்த 51 வயதான சிவில் என்ஜினீயரின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் 90999, 99999 என்று தொடங்கும் ‘பேன்சி’ செல்போன் எண் வேண்டும் என்றால் தொடர்பு கொள்ளுங்கள் என்றிருந்தது. இந்த ‘பேன்சி’ எண்ணை வாங்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டுள்ளார்.
அதன்பின் அவர், குறுந்தகவல் வந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். எதிர்முனையில் மர்மநபர் ஒருவர் பேசியுள்ளார். அந்த மர்மநபர், தான் கூறும் வங்கி கணக்குக்கு ரூ.64,900 அனுப்ப கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த என்ஜினீயரும் அந்த வங்கி கணக்குக்கு பணம் அனுப்பி வைத்துள்ளார்.
அதன்பின் என்ஜினீயர் அந்த எண்ணை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அந்த மர்ம நபரின் எண் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அந்த மர்மநபரை என்ஜினீயரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பின், அந்த என்ஜினீயர் தனியார் செல்போன் நிறுவனத்திற்கு சென்று விசாரித்துள்ளார்.
அப்போது அந்த நிறுவனம் அதுபோன்று ‘பேன்சி’ எண் தருவதாக கூறவில்லை என தெரிவித்துள்ளது. அதன்பின் அந்த என்ஜினீயர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். பின்னர் இதுகுறித்து கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அந்த மர்மநபரை தேடிவருகின்றனர்.