இன்ஜினியரிங் தரவரிசை பட்டியல் வருகிற 16ம் தேதி வெளியிடப்படும்
By: vaithegi Fri, 12 Aug 2022 3:34:33 PM
சென்னை: தமிழகத்தில் 2022-23 ம் கல்வியாண்டிற்கான பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி முதல் தொடங்கியது. மேலும் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த 1.69 லட்சம் மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.
பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு கடந்த ஆண்டை விட அதிகமாக மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 2.7 லட்சம் மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியல் வருகிற 16ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 1.49 லட்சம் மாணவர்கள் கட்டணம் செலுத்தி அனைத்து நடைமுறைகளையும் முடிந்துள்ளனர். அதன் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியல் வெளியான பின் 4 நாட்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய அவகாசம் வழங்கப்படுகிறது. அதன்பிறகு 20ம் தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது.
முதலில் மாற்றுத்திறனாளிகளுக்கும், முன்னாள் ராணுவத்தினர் பிள்ளைகளுக்கும்,அதை தொடர்ந்து விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதை தொடர்ந்து அரசு பள்ளியில் படித்த மாணவ மாணவிகளுக்கு 7.5% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 20ம் தேதி முதல் 23 தேதி வரை கவுன்சிலிங் நடைபெற உள்ளது. பொதுப்பிரிவு கலந்தாய்வு 23ம் தேதி தொடங்குகிறது.
மேலும் அக்டோபர் 21ம் தேதி வரை கலந்தாய்வு பல கட்டங்களாக நடைபெற உள்ளது. கலந்தாய்வு மூலம் கல்லூரிகளை தேர்வு செய்த பின் 7 நாட்களுக்குள் கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.