- வீடு›
- செய்திகள்›
- லைசன்ஸ் மோசடி காரணமாக பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு ஐரோப்பிய யூனியன் 6 மாதம் தடை
லைசன்ஸ் மோசடி காரணமாக பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு ஐரோப்பிய யூனியன் 6 மாதம் தடை
By: Karunakaran Wed, 01 July 2020 10:52:15 AM
பாகிஸ்தான் நாட்டு விமானப்போக்குவரத்துத்துறை மந்திரி, கடந்த வாரம் பாரளுமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பில், பாகிஸ்தானில் பணி புரிந்து வரும் 860 விமானிகளில் 262 பேர் போலியான உரிமம் அல்லது விமானி தேர்வில் முறைகேடு செய்தவர்கள் என்று தெரிவித்தார். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பாகிஸ்தானின் அரசுக்கு சொந்தமான பாகிஸ்தான் ஏர்லைன்சில் பணிபுரிபவர்கள் என்று கூறினார்.
அதன்பின், பாகிஸ்தான் ஏர்லைசில் பணிபுரியும் 434 விமானிகளில் 141 உடனடியாக பணியில் இருந்து நீக்கப்பட்டனர். பாகிஸ்தான் விமானப்போக்குவரத்துத்துறை மந்திரி தெரிவித்த இந்த செய்தி, உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் பாகிஸ்தான் விமான சேவையை தவிர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது இந்த உரிமம் மோசடி விவகாரம் பெரும் அளவில் வெடித்துள்ளது. பாகிஸ்தான் விமானங்களுக்கு ஐரோப்பிய யூனியன் விமான பாதுகாப்பு அமைப்பு 6 மாதங்கள் தடை விதித்துள்ளது. இதனால், பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் இனி ஐரோப்பிய யூனியனுக்கு பயணம் செய்ய முடியாது.
இந்த தகவலை பாகிஸ்தான் விமான போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து ஐரோப்பிய யூனியன் விமான பாதுகாப்பு அமைப்பு கூறுகையில், இந்த தடை இன்று முதல் ஆறு மாதங்களுக்கு நீடிக்கும் எனவும், நிலைமையை ஆராய்ந்து அதற்கு ஏற்றார் போல் முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.